- அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின் இடம்பெற்ற பாரிய தாக்குதல்
- ISIS மேற்கொண்ட பாரிய வெளிநாட்டு தற்கொலை தாக்குதல்
- தற்கொலை தாக்குதல்களால் நிலை குலைந்த குடும்பங்கள்
- தற்கொலை தாக்குதலை தடுத்து நிறுத்த்துவதில் தோல்வி கண்ட மைத்திரி
- இலங்கை தீவு ஒரு தோல்வி கண்ட தேசம்
- பொருளாதார ரீதியாக பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் இலங்கை
- ஆறு மாத காலத்திற்குள் மைத்திரியால் தடம் புரட்டப்பட்ட இலங்கை
- அடுத்த எட்டு மாத காலப்பகுதிக்குள் இலங்கைக்குள் நடக்கபோவது என்ன ?
உயிர்த்த ஞாயிறு படுகொலை இன்று இலங்கையை மட்டும் இன்றி உலகையே சோகத்திற்கு உள்ளாக்கிய ஒரு துயரமான நிகழ்வாக மாற்றம் கண்டுள்ளது . சர்வதேச ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இங்கு அரங்கேறிய மிருகத்தனமான படுகொலையை உணர்பூர்வமாகவும் ஈடுபாட்டுடனும் மக்களை நெகிழக்கூடிய வகையிலும் செய்திகளை உலகளாவிய அளவிற்கு எடுத்து சென்ற வண்ணமே உள்ளனர் .
இதை தொடர்ந்து மேலும் பல அதிர வைக்கும் விடயங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன அவற்றுள்
- அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின்பு பாரிய மனித அவலங்களை ஏற்படுத்திய கொடூரமான பயங்கரவாத தாக்குதலாகவும் , மிகவும் துல்லியமாக திட்டமிட்டு குறுகிய காலப்பகுதிக்குள் பெரும் தொகையான அப்பாவி மக்களின் உயிர்களை பறிகொடுத்த ஒரு கொடூரமான தாக்குதலாகவும்
- ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய தற்கொலை தாக்குதலாகவும் (எழுதும்வரை) 359 அப்பாவி பொது மக்களை பலியெடுத்தும் மற்றும் 500 பேர் வரை படுகாயப்படுத்தியும், இதில் பலியான 41 பேர் பன்னிரெண்டு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
- இத் தாக்குதலில் ஈடுபட்ட 9 தற்கொலை தாக்குதாரிகளில் ஒருவர் பெண் தற்கொலை தாக்குல்தாரி என்றும், இவர்கள் அனைவரும் உயர்கல்விவரை கற்றவர்கள் என்றும் மேலும் இரு தற்கொலை தாக்குல்தாரிகள் உயர்கல்விக்காக ஐக்கிய இராச்சியம் வரையும் அதில் ஒருவர் ஆஸ்திரேலியா வரை சென்று கல்விகற்றவர்கள் என்றும், அத்தோடு இவர்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக வசதியுள்ள குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் அதிர்ச்சியான தகவலை சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
- மிககூடுதலான தடவைகள் இந்த தாக்குதல்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சரிற்கு தெளிவான அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டபோதும் அவற்றை கிடப்பில் வைத்தும் , உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் உதாசீனப்படுத்தியும் அல்லது கவலையீனமாக இருந்ததாலும் இந்த பேரவலம் அரங்கேறியுள்ளது என்றும். இதன் மூலம் பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் மிக பெரிய வரலாற்று தவறை இழைத்துள்ளனர் என்றும் உறுதியாக கருதுகின்றனர்.
தற்போது எல்லோருடைய பார்வையும் இலங்கையின் அரசியல் தலைமைகளின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது
- ஏன் பல முனைகளிலும் இருந்தும் சர்வதேச உளவுதுறைகள் உட்பட இத் தற்கொலை தாக்குதல் பற்றி புலனாய்வு அறிக்கைகள் வந்துகொண்டிருந்த போதும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை
- ஏன் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதி முக்கியமான புலனாய்வு அறிக்கைகளை கவனத்தில் கொள்ளவில்லை
- ஏன் பிரதமருக்கோ மற்றும் அமைச்சரவைக்கோ இந்த அறிக்கை பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை
- ஏன் ஜனாதிபதியால் கூட்டப்படும் பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு பிரதமரோ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரோ அழைக்கப்படுவதில்லை
இவை யாவற்றிற்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ள கருத்து வேறுபாடா காரணம் ?
இதே வேளை பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையில் நிலைகொண்டு தற்கொலை தாக்குதலால் நிலைகுலைத்த குடும்பங்களின் தற்போதைய நிலைமையை உள்நாட்டிலும், வெளீநாடுகளிலும் வெளிகொண்டுவந்த வண்ணமே உள்ளனர். இந்த காணொளிகள் பெரும் அதிர்வு அலைகளை உலகத்தில் உள்ள முலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற வண்ணமே உள்ளது. அதே அளவில் உலக மக்களின் மனதிலும் இதயத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகவும் உள்ளது.
உள் நாட்டிலும் உலக அளவிலும்
- மனைவி பிள்ளைகளை இழந்த கணவன் மார்கள்
- குடும்ப தலைவர்களை இழந்த மனைவி மற்றும் பிள்ளைகள்
- பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்
என்ற வண்ணம் உண்மை மற்றும் மனதை உருக்கும் சோக கதைகளை உலக ஊடகங்கள் ஒளிபரப்பிய வண்ணமே உள்ளது. இந்த துயரமான நிகழ்வுகள் பெரும்பாலான மக்களின் மனதில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதில் ஐயமே இல்லை. பெரும்பாலான பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எஞ்சியுள்ள அங்கத்தவர்கள் தமது கோபத்தை அரசின் தலைமைப்பீடம் பக்கம் காட்டுவதையும் இந்த காணொளிகள் மூலம் காணக்கூடியதாக இருந்தது.
சகல ஆய்வாளர்களும் ஒருமித்த வகையில் இலங்கை அரசாங்கம் அப்பாவி பொது மக்களை பாதுக்காக்க வேண்டிய பாரிய பொறுப்பில் இருந்து தவறிவிட்டது என்றும் மிக தெளிவாக குறிப்பிட்ட வண்ணமே உள்ளனர். இதே குரல் உலகளாவிய அளவில் தற்போது ஏழ ஆரம்பித்துள்ளது.
பல சர்வதேச ஆய்வாளர்கள் தற்போதைய இலங்கை ஒரு தோல்வி கண்ட நாடாகவும் அத்தோடு பல பிரிவுகளாக (அரசியல் ரீதீயாகவும், சமூகங்கள் ரீதீயாகவும்) பிரிந்துள்ள ஒரு தேசமாகவும், மேலும் பொருளாதாரத்தை பொறுத்த அளவில் பெருமளவு வருமானத்தை உல்லாச துறையின் ஊடாக வருவாயை பெற்ற ஒரு நாடாக இருந்த இலங்கைகு சென்ற வருடம் 2.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் உல்லாச பயணிகளாக வருகை தந்துள்ளனர். இதன் மூலம் 250 பில்லியன் ரூபாய்கள் வரை வருமானமாக பெற்றுள்ளது. அதேவேளை இத் தற்கொலை தாக்குதல்களால் பெருமளவு வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மற்றும் சர்வதேச ஊடகங்கள் கடந்த சில நாட்களாக தமது உலகளாவிய ஒளிபரப்புகளின் ஊடாக உலக மக்கள் மத்தியில் இலங்கை பற்றி பெரும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இக் காரணங்களால் உல்லாச துறை பெரும் வீழ்ச்சி அடைவது என்பது திண்மம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் .பல நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு செல்லவேண்டாம் என்று அறிவிக்க தொடங்கியுள்ளது. நேற்று பிரித்தானியாவும் இணைந்துள்ளது .
ஏற்கனவே 26 அக்டோபர் 18 இல் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையும் மற்றும் உயிர்த்த ஞாயிற்று படுகொலையும் பெரும் வெளிநாட்டு முதலீட்டர்களின் மனதில் இலங்கையின் இஸ்திர தன்மையை ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது, மேலும் உல்லாச துறையும் பெரும் வீழ்ச்சியிற்கு உள்ளாக கூடிய சந்தர்ப்பங்கள் கூடுதலாக உள்ளது. இவ் காரணங்களால் இலங்கை பொருளாதாரத்தில் வர இருக்கும் காலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பொருளியலாளர்கள் எதிர்வு கூறுகின்றார்கள்
ஜனாதிபதி மைத்திரியை பொறுத்தவரையில் அவர் பாதுகாப்பு அமைச்சராகவும் மற்றும் நாட்டின் தலைவராகவும் இருந்து அண்மைக்காலத்தில் உலகிலயே அரங்கேறிய மிக பெரிய பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதை தடுத்து இருக்க கூடிய நிலையில் இருந்தும் அதனை தடுக்கமுடியாது தலைவராக சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரி சிந்திப்பது எல்லாம் ஒரே ஒரு விடயம் தான், அதாவது எவ்வாறு தனது இரண்டாவது பதவிக்காலத்தை நீடிக்க முடியும் என்பதுதான், இதனால் அவரால் நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சனைகளில் தனது கவனத்தை செலுத்த முடியாத ஒரு நிலையிலேயே உள்ளார் என்றும் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . மற்றும் ஜனாதிபதி மைத்திரி என்றால் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய இரு விடயங்களான 26 அக்டோபர் .2018 இடம்பெற்ற ஆட்சி மாற்ற முயற்சியும், உயிர்த்த ஞாயிறு படுகொலை 2019 ம் தான் இருக்கும்.
இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் பொது ஒரு தனி மனிதரிடம் அதிகாரங்கள் குவிந்து இருக்கும் போது அவரால் சிகரத்தின் உச்சியில் இருக்கும் ஒரு நாட்டை படு பாதாளத்துக்குள் தள்ள ஆறு மாத கால இடைவெளி போதும் என்பதற்கு இலங்கை தீவு நல்ல ஒரு உதாரணமாக உள்ளது . மேலும் ஜனாதிபதி மைத்திரியின் எஞ்சிய எட்டு மாத பதவி காலமும் இலங்கை தீவிற்கு மிகவும் நெருக்கடி சோதனையும் மிக்க காலமாகவும் அமையலாம் .