உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சந்திரசேகரம் - சந்திரகாசன் அரச சேவையில் இருந்து ஓய்வு

(சித்தா)
எட்டுத் திக்கும் புகழ் விளங்கும் மட்டக்களப்பின் பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆசிரியராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக முப்பத்தாறு வருடங்கள் முத்தான பணிபுரிந்து அகவை அறுபதில் திரு.சந்திரசேகரம் - சந்திரகாசன் அவர்கள் அரச சேவையில் இருந்து இன்று 09.08.2019 ஓய்வுபெறுகின்றார்.
திரு.சந்திரசேகரம் - சந்திரகாசன் அவர்கள் ஆரம்பக் கல்வியை மட்/கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலயத்திலும், மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரியிலும் பயின்று உயர்கல்விக்காக தேசம் புகழ் மட்/சிவானந்தா வித்தியாலயத்திலும் இணைந்து கொண்டார். உயர்கல்வியல் கணிதத் துறையினைத் தெரிவு செய்த இவர் அதில் சித்தியும் பெற்றார். இதன் காரணமாக க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு அக்கறைப்பற்று தொடக்கம் மட்டக்களப்பு வரை கணித பாடத்தினைப் பிரத்தியேகமாக கற்பித்து உயர்தர மாணவர்கள் கணித பாடத்தில் பல்கலைக் கழகம் செல்வதற்கும் ஏனைய துறைகளில் இணைந்து கொள்வதற்கும் வழிசமைத்தார்.
இந் நிலையில் அரச சேவையில் ஆங்கில ஆசிரியராக இணைந்து கொள்ளும் பாக்கியம் பெற்று ஆசிரியராக முதல் நியமனத்தை மட்/கோவில்போரதீவு விவேகாநந்தா வித்தியாயலத்தில் பெற்றுக் கொண்டு ஆங்கில பாடத்தினைக் கற்பித்தார். அத்துடன் மட்/மாங்காடு சரஸ்வதி வித்தியாலயம், மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், மட்/எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆங்கில பாடத்தினைக் கற்பித்து மாணவர்களின் ஆங்கில பாட அடைவினை உயர்த்தினார்.
இக் காலப்பகுதியில் பேராதெனிய ஆங்கில ஆசிரியர் கலாசாலையில் இணைந்து பயிற்றப்பட்டு ஆங்கில ஆசிரியராக மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பயிற்றபட்ட ஆசிரியராக மீண்டும்  பணிபுரிந்தார். மேலும் ஆசிரியத் தொழிலின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் தேசிய கல்வி நிறுவகத்தில் ஆங்கிலம் கற்பிப்பதில் டிப்ளோமாவினைப் பூர்த்தி செய்து தனது தொழில் வாண்மையை உயர்த்திக்கொண்டார்.
2006 ஆம் ஆண்டில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆங்கில பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக உயர் பதவியினை வகித்து ஓய்வு பெறும் வரை கடமையாற்றி ஆங்கில பாட அடைவு மட்டத்தினை உயர்த்துவதற்காகப் பாடுபட்டுழைத்தார். இதன் காரணமாக 12.5 வீதமாகக் காணப்பட்ட ஆங்கில பாட அடைவு மட்டத்தினை 33.6 வீதமாக உயர்ந்துள்ளமையை புள்ளி விபரரீதியாக காணக்கூடியதாகவுள்ளது.
அத்துடன் மாணவர்களின் ஆங்கில அறிவினை மேம்படுத்தும் நோக்கில் ENGLISH FOR YOU Part I, Part II  எனும் இரு புத்தகங்களை வெளியிட்டார். இதன் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிக பயனைப் பெற்றுக் கொண்டனர். சிறு வயதில் இருந்து இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டிய இவர் நாடகம், சங்கீதம் போன்ற வற்றில் ஈடுபாடு காட்டினார். இந்த வகையில் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் தமிழ், ஆங்கில மொழிகளில் பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார். சிறந்த பாடகரான இவர் பொது நிகழ்வுகளில் பழைய மனதிற்கினிய பாடல்களைப் பாடி சபையோரை மகிழ்விப்பார்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக  சேவை புரிந்து அரச சேவையில் இன்று 09.08.2019 ஓய்வு பெறும் திரு.சந்திரசேகரம் - சந்திரகாசன் அவர்களைப் பாராட்டு முகமாக சேவை நலன் பாராட்டு நிகழ்வினை பட்டிருப்பு கல்வி வலய நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகம் அவர்கள் இவரின் சேவையினைப் பாராட்டி சிறப்புச் சொற்பொழிவொன்றினை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.