திருகோணமலை மீனவர் மீது தாக்குதல் நடத்திய 13 கடற்படையினருக்கு 16 வரை விளக்கமறியல்

திருகோணமலை- புல்மோட்டை கடற்பரப்பில் 4மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினர் 12பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபர்களை நேற்றைய தினம் (10) துறைமுக பொலிஸார் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கடந்த இருபத்தி எட்டாம் திகதி புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையினரின் சமிஞ்சையை பொருட்படுத்தாது தப்பியோடியதாக 4மீனவர்களையும் கடற்படையினர் பிடித்து, தாக்கிதுப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில் 4மீனவர்களும் துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குச் சென்று நீதவான் அம்மீனவர்கள் 4பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்தார். 

இதேவேளை தங்களை தாக்கியதுடன் வெடி வைத்ததாகவும் இதனால் ஒரு மீனவரின் காலில் துப்பாக்கி ரவை ஒன்று சத்திர சிகிச்சையின் பின்னர் மீட்கப்பட்டதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர். 

இதனையடுத்து திருகோணமலை பிரதம நீதிமன்ற நீதவான் எம். எச். எம். ஹம்ஸா நான்கு மீனவர்களின் வைத்திய அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணருக்குகட்டளை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.