கல்முனைகுடியில் தராசில் கஞ்சாவினை அளந்த பெண்கள் உட்பட மற்றுமொருவருக்கு விளக்கமறியல்



கல்முனைகுடியில் தராசில் கஞ்சாவினை அளந்த பெண்கள் உட்பட மற்றுமொருவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

கல்முனைகுடி பகுதியில் 7 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பெயரில் கைதானவர்களுக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு புதன்கிழமை(2) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இதன் போது கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞன் உட்பட குறித்த இளைஞனின் வாக்குமூலத்தினை அடிப்படையாக கொண்டு அப்பகுதி வீடு ஒன்றில் கேரளா கஞ்சாவினை தராசில் அளவீடு செய்த இரு பெண்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் மீட்கப்பட்ட 7 கிலோ கஞ்சா குறித்து சந்தேக நபரான பெண்ணொருவரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் பொலிஸாரின் அசமந்தம் பாராபட்சம் குறித்து நீதிவானின் கவனத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்து இந்த வழக்கு தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்த கல்முனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் பொலிஸ் சார்ஜன்ட் ரவூப் ஆகியோரிடம் விளக்கம் ஒன்றினை பெற ஆவண செய்ய வேண்டும் என நீதிவானிடம் விண்ணப்பம் ஒன்றினை கோரி நின்றனர்.

எனினும் சகல சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை மீண்டும் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதில் சந்தேக சகாப்தீன் ரம்சீயா என்பவர் நீதிமன்ற சிறை கூடத்தில் அழுததுடன் தான் ஒரு நிரபராதி என பிரார்த்தித்தபடி இருந்ததை காண முடிந்தது.