வவுனியாவில் கட்சி அலுவலகம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12.20 மணியளவில் குறித்த அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் பிரபாகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் முன்புற வீதியால் வந்தவர்களே தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறுவதுடன் மூவர் தாக்குதலை நடத்திவிட்டு ஓடுவதை அயலவர்கள் அவதானித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.