தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 13வது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா

(பாறுக் ஷிஹான்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இன்று செப்டம்பர் (16) ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இன்று காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பீட மற்றும் பொறியியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது.

இரண்டாவது அமர்வு நாளை செப்டம்பர் 17 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் உட்பட பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.