மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது

(ரீ.எல்.ஜவ்பர்கான்)
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை இலங்கை தமிழ் அரசுக்கட்சி உட்பட பல தமிழ் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரம் வாழைச்சேனை செங்கலடி களுவாஞ்சிக்குடி உட்பட பல தமிழ் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. போக்கு வரத்துச் சேவைகள் இடம்பெற்றன.

உண்ணாவிரதமிழுந்து மரணமாக முன்னாள் விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் திலீபனின் நிவைவு தினத்தை அனுஸ்டிக்க அரசு மறுத்தமையைக் கண்டித்தே இந்த ஹர்த்தால் அனுஸடடிக்கப்படுவதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்காக தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,

'ஜனாதிபதி கோட்டபாய அரசு ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை காலமும் யுத்தத்தினால் உயிர் நீத்த எமது சகல உறவுகளையும் நினைவு கூரும் உரிமை நிர்வாக ரீதியாவும் நீதிமன்ற உத்தரவுகள் மூலமாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்.

ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சம வாயங்களின் படி மரணித்தவர்களை தனி யாகவும் கூட்டாகவும் நினைவுகூருவது அடிப்படை உரிமையாகப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலும் அவற்றை மீறும் வகையில் இந்த அரசாங்கம் ஜனநாயக விரோதமாக இவற்றை தடை செய்கிறது.

மரணித்த எமது உறவுகளை நினைவு கூரும் உரிமைகளுக்கு ஏற்படுத்தப்படும் தடைகளை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு நாம் எழுதிய கடிதத்திற்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ் தேசிய பரப்பில் ஒன்றிணைந்த பத்து அரசியல் கட்சிகளின் சார்பில் பொலிஸாரின் நீதிமன்ற தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் எமது கோரிக்கையை வலியுறுத்திய உண்ணாவிரதம் ஒன்று கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை முழுமையாக மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்தக் கோரிக்கை தமிழ் இனம் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையிலான முழுமையான ஹர்த்தால் பொதுவேலை நிறுத்தத்துக்கு ஒன்றிணைந்த பத்து அரசியல் கட்சி சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது யாவரும் அறிந்ததே.

தமிழ் மக்களின் இனத்துவ அடையாளம், நில உரிமை, சமய மற்றும் கலாசார உரிமைகள் தீவிரமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில் மரணித்த எமது உறவுகளை நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தியும் இதன் மறுதலிப்பு தீவிரமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் இனம் தனது ஆட்சேபனையை வெளிக்காட்டும் முகமாக 28.09.2020 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எனவே, சகல துறைகளையும் சார்ந்த எமது அன்புக்குரிய உறவுகள் இந்த வேண்டுகோளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு பத்து தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் வேண்டி நிற்கிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.