உள்ளங்கையில் அரவம் தீண்டி சிசு மரணம்


மட்டக்களப்பு – பதுளைவீதியை அண்டிய சின்னப் புல்லுமலை கிராமத்தில் அரவம் தீண்டியதால் சுமார் 2 மாதங்களேயான ஆண் சிசுவொன்று, வெள்ளிக்கிழமை (19) மரணித்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் திருமணமான தம்பதியினருக்கு இக்குழந்தை முதல் பிரசவம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

வழமைபோன்று தாய்ப்பாலருந்திய நிலையில் கணணுறங்கிய சிசுவை அதிகாலையில் தாய் அணைத்தபோது, சிசு மயங்கிய நிலையில் இருந்துள்ளது. உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்ப்பித்தபோது, சிசு ஏற்கெனவே மரணித்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசுவின் உள்ளங்கையில் அரவம் தீண்டியிருப்பது உடற்கூராய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. விகாஸ் தேனுகாஸ் எனும் இச்சிசுவின் சடலம், உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்