அனுமதியின்றி போராடினால் ராணுவம் வரும் - எச்சரிக்கும் ஜனாதிபதி ரணில்

 


இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.

அவ்வாறு போராட்டங்களை நடத்த முயற்சிக்கும் பட்சத்தில், ராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்றைய நிகழ்வில் ஆற்றியஉரையின் முக்கிய தகவல்களே இங்கே வழங்குகிறோம். நாட்டில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டு, போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

உரிய தரப்பிடம் அனுமதியை பெற்று, வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் போராட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அனுமதியின்றி போராட்டங்களை நடத்தினால், ராணுவத்தை ஈடுபடுத்தி, அவசரகால சட்டத்தை அமல்படுத்தியேனும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரநடவடிக்கைஎடுக்கப்படும்.

போராட்டங்கள் நடந்த முந்தைய காலங்களில் தீ வைப்பு சம்பவங்கள் பதிவான நிலையில், அதை தூண்டி விட்ட ஊடகம் எது என்பது குறித்து ஆராய்வதற்கு  ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க கூறினார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில், தானும் சாட்சியமளித்ததை இன்றைய உரையின்போது ஜனாதிபதி ரணில் நினைவுகூர்ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கும் ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.