மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தயாரிக்க விசேட குழு நியமனம்!


பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் எவ்வாறான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான ஒழுக்கக் கோவையினை தயாரிப்பதற்காக அறுவர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் ரதெல்ல விபத்து தொடர்பில் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சுற்றுலாவிற்காக மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் எவ்வாறான ஒழுங்கு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் , மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் 6 விசேட நிபுணர்களடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி உள்ளிட்ட விடயத்துடன் தொடர்புடைய நிபுணர்களை உள்ளடக்கி இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய பயணிகள் இது போன்ற பாரிய விபத்துக்களை எதிர்கொள்வதை தடுப்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இக்குழுவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.