
இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முகமாக உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவையினை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (24) மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மாநகரசபை உறுப்பினர் திருமதி பல்தசார், மட்டக்களப்பு வர்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா, மட்டக்களப்பு விமான நிலையத்தின் முகாமையாளர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சுற்றுலாத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிப் படியாக உள்ளுர், வெளியூர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக இவ் உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவை அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அதிதிகள் வானூர்தியில் ஏறி மட்டக்களப்பு அழகைக் கண்டுகளித்தனர்.
இதன் அடுத்த கட்டமாக இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தினால் உள்ளுர் விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது உள்ளுர் சுற்றுலா பயணிகளும் மிகவும் ஆர்வமாக இன்றைய தினம் இச்சேவையினைப் பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.




























