உரிமையாளர் இல்லாமல் பாசல் ஒன்றில் 2 ஜி.பி.எஸ். கொண்டு சென்ற பேருந்து நடத்துநர் மற்றும் அதனை அனுப்பிய வர்த்தகர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதுடன் 7 ஜி.பி.எஸ்.கள் மீட்கப்பட் டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு நேற்றுப் புதன்கிழமை சென்ற தனியார் பேருந்தில் இருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பேருந்தை கல்லடிப் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் காலை 9 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர். இதன்போது பேருந்தின் முன்பகுதியில் பொதி செய்யப்பட்ட பார்சல் ஒன்றைக் கண்டு அது யாருடையது என வினவினர். அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில், பேருந்து நடத்துநர் காத்தான்குடியிலிருந்து வர்த்தகர் ஒருவர் கொழும்பில் குறித்த விலாசத்திலிருந்து வந்து பொறுப்பேற்பார் என தம்மிடம் வழங்கியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினர் அந்தப் பார்சலை உடைத்து சோதனை செய்தபோது அதில் இருந்து இரு ஜி.பி.எஸ். இருப்பதை கண்டு, நடத்துநரைக் கைது செய்ததுடன் பார்சலை வழங்கிய காத்தான்குடி வர்த்தக நிலையத்துக்குச் சென்று சோதனையிட்டதில் அங்கிருந்து 5 ஜி.பி.எஸ்.கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து வர்த்தகரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.