'தமிழ் ஈழ சைபர் படை' அமைப்பின் தாக்குதலில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – SLCERT

நாட்டின் இரண்டு அரச இணையத்தளங்கள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) தெரிவித்துள்ளது.

கவனத்தை ஈர்ப்பதும் கடும்போக்கான செய்திகளை பரப்புவதுமே இவ்வாறான செயற்பாட்டாளர்களின் நோக்கமாகும் என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் நிறைவேற்றதிகாரி லால் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தள செயலிழப்பானது, தாக்குதல் நடத்தப்படுபவரினால் இணையத்தளத்தின் தோற்றத்தினை மாற்றுவதன் மூலம் நிகழ்த்தப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த முயற்சியின் மூலம் தரவுகள் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் நிறைவேற்றதிகாரி தெரிவித்தள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவினால் செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலானது, காலை 6.38 மணிக்கு கண்டறியப்பட்டதுடன், காலை 7.30 மணியளவில் இணையத்தளங்கள் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.