கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் !


நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் தென்கிழக்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள்மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.