இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக் கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது !


இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகத்தில் ஒருவர்திஹகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காலி இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபராவார்.

இவருக்கு எதிராக வாகன திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் நீதிமன்றில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திஹகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கைக் கணினி, 6 கையடக்க தொலைபேசிகள் , 8 வங்கிக் கணக்கு அட்டைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக் கூறி பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்களின் பணத்தைத் தனது வங்கிக் கணக்கில் பெற்று பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்காக இவர் முகநூல் மற்றும் வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரை நேற்று (22) மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக திஹகொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.