இலவச அரிசித் திட்டத்தில் லஞ்சம் கோரும் அதிகாரிகள் !


அரசாங்கத்தின் தேசிய அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசியை வழங்குவதற்கு முன்னர் ஒருவரிடமிருந்து தலா 100 ரூபாய் அறவிடப்படுவதாக பொலன்னறுவை – மன்னம்பிட்டி, திம்புலாகல பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புத்தாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களை வரவேற்று மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே இந்தத் தொகை அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பணம் செலுத்தத் தவறியவர்களுக்கு 10 கிலோ அரிசி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டதாகவும் பொலன்னறுவை – மன்னம்பிட்டி, திம்புலாகல பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும், அரிசி வழங்கும் போது பணம் அறவிடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக திம்புலாகல பிரதேச செயலாளர் S.M. அல் அமீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணம் அறவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை எனவும், அது குறித்து எழுத்து மூலம் தெரிவித்தால், உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.