வைத்தியசாலையில் வைத்தியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு ; பொலிஸார் விசாரணை !



அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அநுராதபுரம் மகாஇலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் நிறுத்தி வைத்து விட்டு சேவைக்குச் சென்று, பின்னர் இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து இந்த வைத்தியர் இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.