ஜப்பான் அரசாங்கம் இடைநிறுத்திய அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வெளிநாட்டு அரசுகள், முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஊழல் மோசடியால் பல ஆண்டுகாலமாக இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்கும்போது ஆரம்பத்தில் நிச்சயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் பன்மடங்கு கட்டணத்தை மேலதிகமாக செலுத்த நேரிடும் என்று நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற நிதி சட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை செயற்படுத்தும் பிரதான துறையாக சுற்றுலாத்துறை கைத்தொழில் அபிவிருத்தி காணப்படுகிறது. மத்தளை விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு வெளியேறும்போது கட்டண அடிப்படையில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் இந்த நாட்டில் புற்றுநோய் போல் தீவிரமடைந்திருந்தது. கடந்த அரசாங்கத்தில் வெளிநாட்டு அபிவிருத்தி திட்டத்தில் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியதாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் அப்போதைய ஜனாதிபதியிடம் முறைப்பாடு அளித்திருந்தார். இவ்வாறான நிலையே அப்போது காணப்பட்டது.
ஜப்பான் அரசாங்கம் இடைநிறுத்திய அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வெளிநாட்டு அரசுகள், முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஊழல் மோசடியால் பல ஆண்டுகாலமாக இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்கும்போது ஆரம்பத்தில் நிச்சயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் பன்மடங்கு கட்டணம் செலுத்த நேரிடும்.
பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளுடன் புதிய அபிவிருத்தி கருத்திட்டங்களை ஆரம்பிப்போம். ஊழலற்ற வெளிப்படையான அரச நிர்வாகம் எமது வெற்றிக்கு பிரதான காரணியாக அமையும் என்றார்.