துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில் கடமையில் இருந்த தென்னாபிரிக்க விமான பணிப்பெண் ஒருவரை விமானத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் துபாயிலிருந்து இன்று காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார். இதன்போது சந்தேக நபர் விமானத்தில் அதிகளவில் மதுபானம் அருந்தியுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் விமானத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க விமான பணிப்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான தென் ஆப்பிரிக்க விமான பணிப்பெண் இது தொடர்பில் விமான பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.