பண மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்விதி ரணசிங்கவுக்கும் அவரது மனைவிக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை !

 
அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனத்தை நடத்தி பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய சக்விதி ரணசிங்க மற்றும் அவரது மனைவிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.

2006ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனமொன்றை நடத்தி, பொது மக்களிடமிருந்து வைப்புத்தொகையாக பெறப்பட்ட 164 மில்லியனுக்கு அதிகமான பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சக்விதி ரணசிங்க மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதனையடுத்து, இருவரும் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. அத்துடன் தலா 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.