மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் !


மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையானது இருந்த போதும் போக்குவரத்தை துப்பரவு செய்யப்பட வேண்டும், எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்களை உடனடியாக அகற்றவேண்டும், அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மாநாடு மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் நேற்று (28) இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர இவ்வாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் கடந்த 2024 ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை 611 வீதி விபத்துகளில் 72 பேர் உயிரிழந்ததுடன் 1,975 மது போதையில் வாகனங்களை செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே 25 ஆம் திகதி வரை 215 வீதி விபத்துக்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம் வேகமாக வாகனங்களை செலுத்தியமையும், மது போதையில் வாகனங்களை செலுத்தியமையே காரணங்கள்.

எனவே மாவட்டத்தில் கரையோரப் பிரதேசமான களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், சந்திவெளி, வாழைச்சேனை, ஓட்டுமாவடி போன்ற பிரதேசங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. அதன் பிரகாரம் குறித்த பிரதேசங்களில் பெற்றோர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு பிள்ளைகளுக்கு தலைகவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் 3 பேரை ஏற்றிக் கொண்டு பயணிக்கின்றனர்.

அதேபோல பலர் தலைக்கவசம் இன்றி 3 பேருக்கு மேல் பயணிப்பது போக்குவரத்து சட்டத்துக்கு ஏதிரானது ஆகவே இவ்வாறு பிரயாணிப்பவர்களுக்கு தலைகவசம் அணியுமாறு 7 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவும்.

போக்குவரத்து சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான், காத்தான்குடிக்கு ஒரு சட்டம் இல்லை எனவே போக்குவரத்து சட்டத்தை மீறி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை இந்த குறித்த பிரதேசங்களில் வீதி நடை பாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் அதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதனை மீறி நடைபாதையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இந்த வீதி பாதுகாப்பு கூட்டத்திற்கு அமைப்பு விடுத்துள்ள போதும் பொதுமக்களின் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பு கூறவேண்டிய சிலர் வருகை தரவில்லை. எனவே அடுத்த கூட்டத்துக்கு அமைப்பு விடுத்தும் வராத திணைக்கள மற்றும் தனியர் பஸ்வண்டி சங்கம், முச்சக்கரவண்டி சங்கங்கள், உட்பட்டவர்கள் வராது இடத்தில் அவர்களுக்கு எதிராக அந்த திணைக்கள செயலாளர்களுக்கு முறைப்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.