கண்டி கலபடவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான துப்பாக்கிதாரி கைது


கண்டி கலபடவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி திங்கட்கிழமை (2) கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் துபாயிலிருந்து நாட்டுக்கு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மேல் மாகாண தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரொத்தொட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் வந்த இருவர், தம்மை பொலிஸ் விசேட அதிரப்படையினர் என அடையாளப்படுத்தி 34 வயதுடைய ஒருவரை அழைத்து சென்று சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த குற்றசெயலுடன் தொடர்புடையதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு பயன்படுத்தப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி என்பன மீட்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டிருந்தது. இதற்கமைய சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் நேற்று துபாயிலிருந்து நாட்டுக்கு மீண்டும் திரும்பிய நிலையில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

27 வயதுடைய ஹெய்யந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.