ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக அவர் இலங்கைக்கு வருகைதர அனுமதிக்கவேண்டாம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முடிவுக்கு வரவிருக்கும் பின்னணியில், தற்போது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகளை முறியடிப்பதற்கான கருவியாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகையை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு தாம் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் உள்ளக நீதிப்பொறிமுறையில் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சர்வதேச பொறிமுறையின் ஊடாக மாத்திரமே தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பூரண ஒத்துழைப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையைக் காலநீடிப்புச் செய்வதற்கும், இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர்.