அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வதாக இருந்தால், சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த 309 கொள்கலன்கள் உரிமையாளர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதி வெளியிட வேண்டும். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையை கைவிட்டே ஆட்சி செய்துவருகிறதென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைதொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்ற தெரிவித்த கருத்துக்கள், அவர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்த கருத்துக்களுக்கு முற்றிலும் மாற்றமான விடயங்களையே தெரிவித்திருந்தார்.
நாங்கள் அன்று கதைத்த திறந்த பொருளாதார கொள்கையை ஜனாதிபதி தற்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் அவரிடம் ஏற்பட வேண்டிய மாற்றம், பொய்சொல்வதை நிறுத்தி உண்மை பேசவேண்டும். பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்த விடயங்களில் அதிகமான பொய்யாகும்.
சுங்கத்தில் இருந்து 309 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்த விடயத்தை சாதாரணமாகவே ஜனாதிபதி கருதுகிறார்.அப்படியென்றால், அதுதொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி ஏன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருக்கிறார்.
309 கொள்கலன்களில் சிவப்பு ஸ்டிகர் ஒட்டப்பட்ட 150 கொள்கலன்களை ஏன் விடுவித்தார்கள். இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றதால்தான் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். மாறாக கடந்த கால அரசாங்கங்கள் செய்த அதே செயலை செய்வதற்கு அல்ல.
அதேநேரம் தற்போது துறைமுகத்தில் 400 உப்பு கொள்கலன்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தன. உப்பு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட திகதிக்கு பின்னர் கொள்கலன்களில் ஏற்றப்பட்டவை என கருதியே இந்த கொள்கல்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால் அந்த 400 கொள்கலன்களில் 6 கொள்கலன்கள் விடுக்கப்பட்டுள்ளன.அந்த கொள்கலன்கள் யாருடையது என்ற பெயர் பட்டியலை ஜனாதிபதி முடியுமானால் வெளிப்படுத்தட்டும்.
மேலும் மத்தய வங்கி பிணைமுறி மோசடியைவிட பல மடங்கு மோசடி இடம்பெற்ற வி.எப்.எஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைமேற்கொண்டு குற்றவாளிகளை வெளிப்படுத்துவதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் அதுதொடர்பில் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. அதனால் அரசாங்கம் முடியுமானால் வி.எப்.எஸ் கொடுக்கல் வாங்கலை மோசடியை கண்டுபிடித்துக்காட்டட்டும் என சவால் விடுகிறேன்
வெளிப்படைத்தன்மையும் ஆட்சி செய்வதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வெளிப்படை தன்மையை கைவிட்டுள்ளது. தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு தலைவர் நியமனம் இன்னும் இடம்பெறவில்லை. அதனால் தகவல்கள் கேட்டால் வழங்கப்படுவதில்லை என்றார்.