மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கிருந்த 30 கோழிகள் மற்றும் வளர்ப்பு நாய் ஒன்று திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கருவப்பங்கேணியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (19) 2700 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து வைத்தியரின் பண்ணையில் திருடப்பட்ட 30 கோழிகளில் சிலவற்றையும் நாயையும் மீட்டதுடன் குறித்த இளைஞன் நீண்டகாலமாக பல திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்தவன் எனவும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிசார் இவரை 3 நாள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.