மட்டக்களப்பில் மக்களை அச்சறுத்திவரும் முதலை !


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் முதலையின் நடமாட்டத்தினை தடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓந்தாச்சிமடத்தில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள நீர்நிலையில் உள்ள பாரிய முதலையொன்று மக்களை அச்சுறுத்திவருகின்றது.

இரவு வேளைகளில் இந்த முதலை மக்கள் குடியிருப்புகளை நோக்கிச்செல்வதன் காரணமாக இது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதனால் அதனை அங்கிருந்து அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த முதலையினால் இரவு நேரங்களில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் செல்வோரும் பல்வேறு அச்சுறுத்தலுக்குள்ளாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஏழு அடிக்கு மேல் காணப்படும் இந்த இராட்சத முதலையினால் உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அவற்றினை அங்கிருந்து அகற்ற நடவடிக்கையெடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.