சம்மாந்துறையில் அதி சொகுசு வாடகைக் காரில் ஹெரோயினுடன் பயணித்த மூவர் கைது


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியான இஸ்மாயில் புரம் பகுதியில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இன்று திங்கட்கிழமை (15) மதியம் இடம்பெற்றுள்ளது.

40 ,21 ,28 ,வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்மாயில் புரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் அதி சொகுசு கார் வழமைக்கு மாறாக அங்கும் இங்கும் ஓடி திரிவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழு ஒன்று களவாடிய மோட்டார் சைக்கிளை ஈடு வைத்து அம்பாறை நகர் பகுதியில் வாகனம் வாடகைக்கு விடுகின்ற நிறுவனம் ஒன்றில் அதி சொகுசு கார் ஒன்றினை பெற்று அந்த கார் மூலம் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.அதன் பின்னர் குறித்த காரில் சம்மாந்தறை பிரதேசத்திற்கு வந்த சுமார் 8 பேர் கொண்ட குழு ஒன்று இரவு முழுவதும் போதைப்பொருள் குதூகலம் மேற்கொண்டு வாடகை காரில் வழமைக்கு மாறாக அங்கம் இங்கும் ஓடி நடமாடி வந்துள்ளனர்.

பின்னர் அதி சொகுசு வாடகை காரை இஸ்மாயில் புரத்திலும் அதன் ரிமோட் சாவியை மலையடிக்கிராமத்திலும் வைத்திருந்த நிலையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் 3 பேர் கைதாகியுள்ளதுடன் ஏனைய 5 சந்தேக நபர்களும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்பதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கொண்டள்ளதுடன் தப்பி சென்ற சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையாடி கிராமம், வளத்தாப்பிட்டி , இஸ்மாயில் புரம், பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்கள் பயணம் செய்த அதி சொகுசு காரில் இருந்து ஹெரொயின் போதைப்பொருள் மற்றும் கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட சான்றுப் பொருட்கள் யாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.