பங்களாதேஷில் இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதாக கூறி இந்து இளைஞர் அடித்து கொலை


பங்களாதேஷில் மைமென்சிங் நகரில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்று, உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர்.


வங்கதேசத்தில் இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கடும் பதற்றமும் வன்முறையும் வெடித்துள்ளது. சமீபத்தில் டாக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபரால் சுடப்பட்ட ஷெரீப் ஓஸ்மான், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் வெளியானதும் டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் போராட்டம் கலவரமாக மாறி, அவாமி லீக் கட்சி அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது


இந்த கலவரத்தை பயன்படுத்தி, மைமென்சிங் நகரில் தீபு சந்திர தாஸ் என்ற 30 வயது ஹிந்து இளைஞர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டார். அவரை வீட்டில் வைத்து அடித்து, உடலை சாலைக்கு இழுத்துவந்து, கம்பத்தில் கட்டி மீண்டும் சரமாரியாக அடித்துக் கொன்று, தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் உள்ள ஹிந்துக்கள் மட்டுமின்றி எல்லை கடந்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்நிலையில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், வன்முறையை கண்டித்து இரங்கல் தெரிவித்ததுடன், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என உறுதியளித்துள்ளார்.