அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ அல்லது எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. கல்வி மறுசீரமைப்புகளை எதிர்க்கட்சியினர் தவறாக அர்த்தப்படுத்த வேண்டாம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (6) 'டித்வா' சூறாவளி காரணமாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டித்வா சூறாவளி காரணமாக இந்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை அனைவரும் நன்கு அறிவர்.
நாம் எதிர்பாராத வகையில் எமது நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளான வீதிகள், பாலங்கள் ஆகியவற்றுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டிய அவசியமில்லை. பல பாடசாலைகளையும் வீடுகளையும் நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளதுடன், சிலவற்றை இருக்கும் இடங்களிலிருந்து அகற்றவேண்டியும் உள்ளது. அத்துடன், இதுவரை வரலாற்றில் கண்டிராத அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.













