
மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் டெங்கு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்த பகுதிகளில் உள்ள கிராமங்கள் வெள்ளதில் மூழ்கியிருந்தது. இந்நிலையில் குறித்த சித்தாண்டி - 2, சித்தாண்டி - 3, சித்தாண்டி - 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு தாக்கத்தின் அதிகாரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.
குறிப்பாக சித்தாண்டி 2,3,4 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு தாக்கத்தினால் நோயாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் இதுவரை 64 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று சிலர் வெளியேறிய நிலையில் பலர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு விசேட கள ஆய்வு சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவுக்கு உட்பட்ட 14 பொது சுகாதார பிரிவுகளிலும் உள்ள பொது சுகாதார கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சித்தாண்டியின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு தொடர்பான இடங்களை கண்டறிந்ததுடன் அதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் டெங்கு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து வீட்டின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடர்பான முறைப்பாடுகளையும் பதிவு செய்தனர்.
குறித்த விசேட நடவடிக்கையில் மட்டக்களப்பு பிராந்திய பொது சுகாதார பணிமனை அதிகாரிகள், செங்கலடி பொது சுகாதார பணிமனை பொது சுகாதார வைத்தியர் மற்றும் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் என பலரும் கலந்துகொண்டு இந்நடவடிக்கையை மேற்கொண்டதில் 794 வீடுகள் டெங்கு தொடர்பில் ஆராயப்பட்டு 113 வீடுகளில் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டதுடன் டெங்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு சட்டநடவடிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதுவரை சுமார் 50க்கு மேற்பட்டோருக்கு வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.
குறித்த டெங்கு தாக்கம் அதிகமாக உள்ள சித்தாண்டி 2,3,4 ஆகிய பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் டெங்கை கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் புகை என்பன விசுறும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது.
சித்தாண்டியில் களத்தில் இறங்கிய பொது சுகாதார பிரிவினர் - டெங்கு சிவப்பு எச்சரிக்கை!! https://www.battinews.com/2026/02/blog-post_50.html .
Posted by Battinews on Wednesday, February 4, 2026












.webp)