ஹெரோயினுடன் தாய்லாந்து பிரஜை உட்பட இருவர் கைது !



3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், அதனை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (03) இரவு களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து ஒரு கைத்தொலைபேசியும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், இந்த போதைப்பொருள் தொகையை வழங்கிய நபர் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க 18ஆம் கட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் தாய்லாந்து பிரஜையான 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.