ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை



78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, பின்வரும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் கீழ் கைதிகளுக்கு இந்த விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் சிறையில் கழித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வார கால பொதுமன்னிப்பு இதன்கீழ் வழங்கப்படுகிறது.

75,000 ரூபாவிற்கு குறைந்த அபராதத்தைச் செலுத்தத் தவறியமையினால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலத்தை ரத்துச் செய்தல் இந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இடம்பெறுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.