
சம்பவம் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜனவரி 29 ஆம் திகதியன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
2026 ஜனவரி 29 அன்று கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான ஊடகச் செய்திகளைத் மேற்கோள் காட்டி, அறிக்கையொன்றை வெளியிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தகவல்களைத் திரட்டிய பின்னர், இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ அத்தகைய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என உயர்ஸ்தானிகராலயம் மேலும் கூறியுள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பலாத்காரப் பிரயோகம் மேற்கொள்ளப்படக்கூடாது எனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
வென்னப்புவ, வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் சென்ற 12 இலங்கையர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள் இருந்தபோது, ஜனவரி 29 அன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் தாக்கப்பட்டதாக மீனவர் குழுவொன்று குற்றம் சுமத்தியிருந்தது.
சர்வதேசக் கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டைரோன் மெண்டிஸ் தெரிவித்தார்.
மூன்று மீன்பிடிப் படகுகள் தாக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு இலங்கைக் கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இந்தியக் கரையோரக் காவல்படையினர் தாக்குதலை மேற்கொள்வதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.












