
வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் அரசாங்கம் உடன் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்.மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
கொழும்பில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இனவாதம் பரப்பவில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் மறைமுகமாக இனவாத கருத்துக்களை பரப்பி விடுகிறது. நாங்கள் ஒருபோதும் இனவாதமாக செயற்படவில்லை. தேசியத்தை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடுவது இனவாதமாக அமையாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் தமக்கு நல்லதொரு நிலைப்பாடு இருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தி மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டார்கள். ஆனால் ஒருவருடம் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்பதை ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை முன்வைக்கும் யோசனை அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சியில் இருந்து பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டள்ளன. ஆனால் ஆளும் தரப்பில் இருந்து இதுவரையில் பெயர்கள் பரிந்துரைக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்பதையே இது வெளிப்படுத்துகிறது என்றார்.










.jpeg)

