காத்தான்குடியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்



(நூருல் ஹுதா உமர்)

காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், இன்று (09) காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

மாணவர்களின் நலன், சமூக ஒழுங்கு மற்றும் மதச் சூழலை கருத்தில் கொண்டு நடைபெற்ற இக் கலந்துரையாடலின் போது, தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதன்படி, அனைத்து தனியார் வகுப்புகளும் மாலை 6.30 மணியுடன் கட்டாயமாக நிறைவு செய்யப்பட வேண்டும், பிரதி வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் ரமலான் மாதத்தில், தனியார் வகுப்புகள் காலை 7.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்படும், நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 13.03.2026 முதல் 29.03.2026 வரை அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்களை காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என நகர சபை அறிவித்துள்ளது. இத்தீர்மானங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.