ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா: மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை


இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் இலவச விசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஈரானியக் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள், மனிதாபிமானப் பாதுகாப்பின் கீழ் இலங்கையில் தங்கியிருக்க அனுமதிக்கும் வகையில் இந்த ஒரு மாத கால இலவச விசா வழங்கப்படுவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் இவ்வாறான சூழல்கள் ஏற்படும் போது இது போன்ற முடிவுகள் எடுக்கப்படலாம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினருக்கும் ஆதரவாகவோ அல்லது பாதிப்பாகவோ அமையும் நோக்கத்தில் எடுக்கப்படுபவை அல்ல என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானிய மாலுமிகள் தொடர்பான இந்தத் தீர்மானமானது, சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இலங்கைக்குப் பொருந்தக்கூடிய கடல்சார் சட்டங்களை மிகத் துல்லியமாகப் பின்பற்றியே எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் இலங்கை தனது மனிதாபிமானப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் தனது அணிசேராக் கொள்கைக்கு இணங்கவே செயற்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அரசியலில் நடுநிலையைப் பேணுவதோடு, அதேவேளை மனிதாபிமான கடமைகளையும் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.