கண்டி - பல்லேகலையில் விபத்து: பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழப்பு !


கண்டி - திகன வீதியில், பல்லேகலை இராணுவ முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் காயமடைந்துள்ளார்.

கண்டியில் உள்ள முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டுப் பணிகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், இன்று வியாழக்கிழமை (02) காலை பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மாணவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் தரம் 12-இல் கல்வி பயிலும் மாணவர் என தெரியவந்துள்ளது. காயமடைந்த மாணவர் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.