நாட்டில் டெங்கு காய்ச்சலினால் இதுவரை இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு .



நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இன்று (04) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த 12 பேரில், 12 வயதுக்கும் குறைந்த இரண்டு சிறுவர்களும் அடங்குவர் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சிறுவர் மரணங்களும் கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக வைத்தியர் பிரஷிலா தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலினால் மொத்தமாக 25,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது நிலவி வரும் இடைவிடாத மழைவீழ்ச்சி மற்றும் நுளம்புகள் பெருகுவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதே டெங்கு பரவல் அதிகரிப்பதற்குக் முக்கியக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீர் தேங்கி நிற்கும் இடங்கள் நுளம்பு உற்பத்தித் தளங்களாக மாறுவதால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வைத்தியர் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.