குருணாகல் பிரதி மேயர் 30 இலட்சம் இலஞ்ச பணத்துடன் கைது


தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் பேருந்து நிலையத்தைத் துப்புரவு செய்தல் மற்றும் பொது மலசலக்கூடத்தைத் துப்புரவு செய்தல் ஆகியவற்றுக்கான டெண்டரை வழங்குவதற்காகப் பிரதி மேயர் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த டெண்டரை வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபா மற்றும் மாதாந்தம் தலா 5 இலட்சம் ரூபா வீதம் கோரப்பட்டுள்ளதுடன், அதில் முதற்கட்டமான 30 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோதே பிரதி மேயர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதி மேயரை நாளை (09) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவான இவர், பின்னர் சபையில் ஆட்சியமைப்பதற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியதையடுத்து பிரதி மேயராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.