18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஜனாதிபதி நிதியமும் ஜனசக்தி அறக்கட்டளையும் இணைந்து விசேட ஒத்துழைப்புத் திட்டம் ஒன்றினை புதன்கிழமை (06) அன்று ஆரம்பித்து வைத்துள்ளன.
சிறுவர்களின் மருத்துவ தேவைகளுக்கான நிதி தடைகளை குறைப்பதை நோக்கமாககொண்ட இத்திட்டம், 'வெற்றிபெறும் நாளைய உலகிற்கு இன்றைய ஆரோக்கியத்தைபடைப்போம்' எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய நலத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.நிதியுதவி வழங்கப்படும் முறை: பொதுவாக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நோயாளியின் சிகிச்சைச் செலவில் ஒரு பகுதி மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தப் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், ஜனாதிபதி நிதியம் வழங்கும் தொகைக்கு நிகரான ஒரு தொகையை அல்லது எஞ்சிய சிகிச்சைச் செலவுத் தொகையை (இவ்விரண்டில் எது குறைவானதோ அந்தத் தொகையை) ஜனசக்தி அறக்கட்டளை மேலதிகமாக வழங்கும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை: இத்திட்டத்தின் கீழ் மேலதிக நிதி உதவியை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள், ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பிக்கும்போது தமது தகவல்களைப் பாதுகாப்பான முறையில் ஜனசக்தி அறக்கட்டளைக்கு வழங்குவதற்கான அனுமதிப் படிவத்தைச் சரியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நிதி உதவி தேவைப்படும் சிறுவர்களைக் கண்டறிதல், தகவல்களை உறுதிப்படுத்துதல் மற்றும் நிதியை அங்கீகரித்தல் போன்ற பணிகள் வழமை போல ஜனாதிபதி நிதியத்தினாலேயே முன்னெடுக்கப்படும்.
நிதி விநியோகம்: சாதாரண சிகிச்சைகளின் போது, சிகிச்சை முடிவடைந்த பின்னரே உரிய நிதி சிறுவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படும். எனினும், அவசர சிகிச்சைகள் மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்காக, சிகிச்சை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே நிதி வழங்கப்படும்.
வருகின்ற 2026 மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜனாதிபதி நிதியத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்காக, ஜனசக்தி அறக்கட்டளையிடமிருந்து இந்த மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுவர்.












.jpg)