எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம் , ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது - மஹிந்த ராஜபக்ஷ


எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம். ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்படவில்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் எதிர்க்கட்சிகள் நெருக்கடிக்குள்ளாகின்றன. இன்று ஆட்சியில் உள்ளவர்கள் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அரசாங்கங்களுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள்.

கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்பட போவதில்லை. ஜனநாயக ரீதியாகவே என்றும் செயற்படுவோம்.

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம்.ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான ஆளுமை மற்றும் தகைமை எமக்கு உள்ளது என்றார்.