அடுத்த மே தினத்திற்குள் அரசியல் தீர்வு விடயத்திலே முன்னேற்றம் காண வேண்டும் - இரா.சாணக்கியன்


பல குழப்பங்கள் வரும், பல பிரச்சனைகள் வரும். இந்த காலப்பகுதியிலே எங்களுக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அடுத்த மேதினத்திற்கு இடையிலே நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் இதை விட இன்னும் ஒரு படி மேலே எங்களுடைய பிரதேசத்திலே எங்களுடைய அரசியல் தீர்வு விடயத்திலே முன்னேற்றம் காண வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பு பட்டிப்பளையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின கூட்டத்தில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நமது மாவட்டத்திலிருக்கும் உண்மையான கட்சி உறுப்பினர்களை வைத்து, உண்மையான கட்சி பற்றாளர்களை அழைத்து, உண்மையான தமிழ் தேசிய தமிழரசு கட்சியினுடைய ஆதரவாளர்களை அழைத்துத்தான் நாங்கள் இந்த மேதின நிகழ்வுகளை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய மாவட்டத்திலே பல இடங்களிலே பம்பு செட் கொடுத்தவர்களை அழைத்து மேதின நிகழ்வு நடத்துகிறார்கள். வீடு திட்டம் தருவோம் என்று சொல்லி மேதின நிகழ்வு நடத்துகிறார்கள். மலசலக் கூடம் கட்டித் தருவோம் என்று சொல்லி மேதின நிகழ்வு நடத்துகிறார்கள்.

ஆனால் நாங்கள், எங்களுடைய உண்மையான தமிழரசு கட்சி ஆதரவாளர்களை, தமிழரசு கட்சியை ஆதரிக்கின்றவர்களை மாத்திரம் தான் நாங்கள் அழைத்து இந்த மேதின நிகழ்வை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பொழுது தமிழ் மக்கள் மட்டுமல்ல இலங்கையில் இருக்கும் அனைத்து மக்களும் எதிர்பார்த்தது, இடதுசாரி கட்சி என்று சொன்னால் மக்களுக்கு சார்பான தீர்மானங்களை எடுப்பார்கள், மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வார்கள், மக்களைப் பாதுகாப்பார்கள் என்று சொல்லி எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்து ஒன்றரை வருடத்திற்குள்ளே அவருடைய அமைச்சர்கள் கோடிக்கணக்கான பெறுமதியான வீடுகளைக் கட்டிவிட்டார்கள் என்ற செய்தி வருகின்றது. அவர்களுடைய அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட நிலக்கரியிலே ஊழல் நடக்கின்றது என்று வருகின்றது செய்திகள்.

அதேபோலத்தான் மிக அண்மையிலே 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் காணாமல் போய்விட்டது என்ற செய்தி வருகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியிலே இந்த அரசாங்கம் தங்களுடைய ஊழலை, தங்களுடைய செயல்திறன் அற்ற செயற்பாடுகளை மறைப்பதற்கு, தங்களுடைய செயல்திறனை மறைப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தாலுங்கூட, அவர்களுடைய நடவடிக்கையால் எங்களுடைய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய மக்கள், மக்கள் மீது வரிச் சுமை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீது மின் கட்டணத்துடைய விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீது எரிபொருளுடைய விலை அதிகரிக்குது, அந்த சுமையை மக்கள் மீது சுமத்தியிருக்கிறார்கள்.

ஆனால் ஊழியருடைய சம்பளம் பணவீக்கத்துக்கு குறைவாக இன்னும் அதிகரிப்பு இல்லை. அந்த வகையிலே எங்களுடைய மாவட்டத்திலே எங்களுடைய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருந்தார்கள், பேச்சாளர்கள் பேசியிருந்தார்கள், மீனவர்கள், விவசாயிகள், கால்நடைப் பண்ணையாளர்கள் அனைத்தும் அனைவரும் பாதிக்கப்பட்டார்கள்.

ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு நாளும் மத்திய அரசாங்கத்தால் மாத்திரம் தீர்வு வழங்க முடியாது. ஒரு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்திலே சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வின் ஊடாக தமிழ் மக்களாகிய நாங்கள் எங்களை ஆளக்கூடிய வகையான ஒரு தீர்வின் ஊடாகத்தான் நாங்கள் எங்கள் பிரதேசத்திலே எங்களுடைய மக்களை நாங்கள் பாதுகாக்கலாம்.

அந்த வகையிலே எதிர்வரும் காலத்திலே நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த ஆண்டிற்குள்ளே பல பல விடயங்கள் நடைபெற இருக்கின்றது. இந்த அரசாங்கத்துக்குள்ளே பல குழப்பங்கள் நடைபெற இருக்கின்றது. சிங்கள செய்தியிலே பார்த்திருந்தேன், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலே குழப்பம், ஜனாதிபதிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலே குழப்பம், என்.பி.பி-க்கும் ஜே.வி.பி-க்கும் இடையிலே குழப்பம்.

பல குழப்பங்கள் வரும், பல பிரச்சனைகள் வரும். இந்த காலப்பகுதியிலே எங்களுக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அடுத்த மேதினத்திற்கு இடையிலே நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் இதை விட இன்னும் ஒரு படி மேலே எங்களுடைய பிரதேசத்திலே எங்களுடைய அரசியல் தீர்வு விடயத்திலே முன்னேற்றம் காண வேண்டும்.