அதிக விலைக்கு கீரி சம்பாவை விற்போருக்கு வலை வீச்சு


அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த கெஸ்பேவ, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது.

அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக இன்று சனிக்கிழமை (02) பிலியந்தலை பகுதியை மையப்படுத்தி பல விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை பதுக்கி வைத்தல் போன்ற முறையற்ற செயல்கள் இடம்பெற்றால், அது குறித்து உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

எந்தவொரு நுகர்வோரும் இது தொடர்பான முறைபாடுகளை அலுவலக நேரங்களுக்குள் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.