தங்கோட்டுவ, கடுகெந்த மஹவத்த பகுதியில் அமைந்துள்ள அரசாங்க பண்ணைக்கு சொந்தமான நிலமொன்றில், மணல் அகழ்ந்து கைவிடப்பட்ட நீர் நிறைந்திருந்த குழியில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்கோட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுகெந்த மஹவத்த பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய பிராங்க்ராஸ் கிரேஷன் பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரரான 37 வயதுடைய ஒலிவர் ரவீந்திர குமார் பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவர் உள்ளிட்ட நால்வர் நீர் நிறைந்த குழியில் மீன்பிடிப்பதற்காக வலை வீசியுள்ளனர். பின்னர் அன்று மாலை 6.00 மணியளவில், விரித்திருந்த வலையை வெளியே எடுப்பதற்காக ஐந்து நண்பர்கள் அந்த பள்ளத்தில் இறங்கியுள்ளதுடன் ஐவரில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். ஏனையோர் தப்பித்து கரை சேர்ந்ததாக தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களை அங்கிருந்தவர்கள் தேடிய போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடற்படை சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சகோதரர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.













.jpg)