வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களுக்கு உலக வங்கி ஆதரவு...


உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இன்று (06) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தனர்.

வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் அரச ஊழியர்களின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரசின் வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக உலக வங்கியின் ஆதரவை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்காக ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ' பொது நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்தின்' செயல்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இந்த நிறுவனத்துடன் உலக வங்கி இணைந்து பணியாற்றுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் நேர்மையைப் பேணுவதற்காக நிறுவப்பட்டுள்ள 'உள்ளக விவகாரப் பிரிவு' சார்ந்த வேலைத்திட்டங்களில் உலக வங்கி பிரதிநிதிகள் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது மேலதிகமாகக் கலந்துரையாடப்பட்டது.

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan), சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களான ரிச்சர்ட் வோக்கர் (Richard Walker), அந்தனி ஒபேசேகர (Anthony Obesekere) மற்றும் நிர்வாக விசேட நிபுணர் டில் ஹார்ட்மேன் (Till Hartman) ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.