இனி பேருந்து நிலையங்களுக்கு அலைய வேண்டாம்: 'Online' முன்பதிவுக்கு ரூ.30 மட்டுமே!



இலங்கையில் நீண்ட தூர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்காக, இணையவழி (Online) இருக்கை முன்பதிவு செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (4) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

தினசரிப் பயன்பாட்டில் தொடருந்துகளைக் காட்டிலும் பேருந்துகளே மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய பேருந்து நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய சிரமத்தைத் தவிர்த்து, பயணங்களை முன்கூட்டியே திறம்பட திட்டமிட இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தனியார் பேருந்து சேவைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், மாக்கும்புர பல்முனைய போக்குவரத்து மையம், காலி மற்றும் கண்டி ஆகிய முக்கிய மையங்களில் செயல்படுத்தப்படுகிறது.

பயணிகள் www.busticket.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 0112 001 266 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டோ தங்கள் இருக்கைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், மாகும்புர மையத்தில் இதற்கான நேரடி உதவியும் வழங்கப்படுவதுடன், இந்தச் சேவைக்காக சுமார் 30 ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படுகிறது.

ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவரான மோதிலால் டி சில்வா, புத்தாண்டு விடுமுறை காலத்தை முன்னிட்டு தனியார் துறை கூட்டாளர்களுடன் இணைந்து இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.