இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது?! ; உறவுகளின் போராட்டத்தை அரசியல் என்று கருதவேண்டாம் - சாணக்கியன் MP



செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது?! உறவுகளின் போராட்டத்தை அரசியல் என்று கருதவேண்டாம். அது அவர்களின் ஆதங்கம் மற்றும் எதிர்பார்ப்பு என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நீதி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முன்னாள் நீதி அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வந்து மக்களை சந்தித்து வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் ஏதும் நிறைவேறவில்லை. நீதியமைச்சர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகைத் தந்திருந்தார் செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அதன்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த போரட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது என்று குறிப்பிட கூடாது. அது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆதங்கம் மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகும்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு தற்போது தான் முழுமையான பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன். அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது.

1996ஆம் ஆண்டுக்கு முன்னரும் இந்த பகுதியில் மனித உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கடற்படையின் அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.