
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2026 ஜூலை 3 முதல் ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவு வரை இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனைத்து விண்ணப்பங்களும் கட்டாயம் ஆன்லைன் முறையிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களது பாடசாலை அதிபர் ஊடாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி தாங்களே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையை (NIC) பயன்படுத்த வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள், தமது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்ற உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று, வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக வாசித்து சரியான முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்கள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை எதிர்கால தேவைக்காக பாதுகாத்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், எந்த காரணத்திற்காகவும் விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிக்கப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 0112 784 208, 0112 784 537, 0112 785 922 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம்.



