இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத் தடுக்க அறிவியல் ரீதியான பாலியல் கல்வி அவசியம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில் 8,700 இளம்வயதுக் கர்ப்பங்களும், 874 எச்ஐவி தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதுடன், அவ்வாறு எச்ஐவி தொற்றுக்கு அளான 107 பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாவர் ஆகையால் எதிர்காலச் சந்ததியினரைப் பாதுகாப்பதற்காக வயதுக்கேற்ற அறிவியல் ரீதியான பாலியல் கல்வியை வழங்குவது அவசியம் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (15) தேசிய பாலியல் கல்வி வழிகாட்டல்கள் வெளியீட்டு நிகழ்வு சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ , மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அமைச்சின் செயலளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் உரையற்றுகையில்,

அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள மூன்று வழிகாட்டிப் பிரசுரங்களும் வெறும் ஆவணங்கள் அல்ல; அவை பிள்ளைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும். ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகள் பல தசாப்தங்களுக்கு முன்னரே இத்தகைய அறிவியல் அணுகுமுறைகளை ஆரம்பித்துவிட்டன. எமது நாட்டில் இந்த நடவடிக்கைகள் தாமதமடைந்தாலும், தற்போது காத்திரமான கட்டத்தை எட்டியுள்ளோம்.

கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில் 8,700 இளம்வயதுக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு 874 எச்ஐவி தொற்றாளர்களும் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களுள் 107 பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதற்கும் மேலதிகமாக பொலிஸ் நிலையங்களில் 10,455 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் இவ்வாறு முறைபாடளிக்கப்படாமல் எத்தனையோ பாலியல் துஷ்பிரியயோகங்கள் சமூகத்தில் இடம்பெற்றுள்ளமையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது.

பிள்ளைகளின் உடலில் ஏற்படும் ஓர்மோன் மாற்றங்களால் ஏற்படும் சமூகத் தொடர்புகளைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, அவர்களுக்குச் சரியான விழிப்புணர்வை வழங்க வேண்டும். இந்த புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒரு வாழ்க்கையும் எதிர்காலமும் ஒளிந்துள்ளது. இதற்குச் சமூகம் என்ற ரீதியில் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, போதிய விழிப்புணர்வு இல்லாததே சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

உலகெங்கிலும் இதற்குப் பல்வேறு தடைகள் காணப்பட்டாலும், அவற்றுக்கு அறிவியல் ரீதியான பதில்கள் உள்ளன. எனவே, வயதுக்கேற்ற பாலியல் கல்வியை நாம் உறுதியுடன் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு தடையை ஏற்படுத்த முன்னிற்பவர்கள் எச்.ஐ.வி பரவல் மற்றும் இளம்வயதுக் கர்ப்பங்களின் சமூகப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதுவொரு ஊடகக் காட்சியோ அல்லது அரசியல் திட்டமோ அல்ல காலங்கடந்தேனும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேசியப் பொறுப்பாகும் என்றார்.