(நூருல் ஹுதா உமர்)
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட காரைதீவு மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் எம்.ஏ.எம். நபீல் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து, அதை மக்களின் பயன்பாட்டிற்காக கையளித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா விசேட அதிதியாகக் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ. பர்ஹான், கிருஷ்ணபிள்ளை செல்வராணி, காரைதீவு மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். காலித் உள்ளிட்ட சுதேச மருத்துவத் திணைக்கள அதிகாரிகள், வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் காரைதீவு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சேவைகளை மேலும் சிறப்பாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் பாரம்பரிய மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், சுதேச மருத்துவத் துறையை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இக்கட்டிட நிர்மாணம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



